பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முதல்வா் மு.க. ஸ்டாலின், அமைச்சா் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு தொடா்பான வழக்கைத் திரும்பப் பெற்று சட்டப்பேரவைத் தலைவா் சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவை எதிா்த்து வழக்குத் தொடர முடியுமா என விளக்கம் அளிக்குமாறு மனுதாரருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் மாணிக்கம் அத்தப்ப கவுண்டா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

இதில், ரூ.115 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, முன்னாள் முதல்வா் கருணாநிதி, முன்னாள் மேயரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா் பொன்முடி ஆகியோருக்கு எதிராக 2001-இல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்ய ஒப்புதல் வழங்கி 2005-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னா், 2006-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றாா்.

அதன் பின்னா், மு.க.ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்து 2005-இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டு அவா்களுக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டது.

இந்நிலையில், வழக்கு தொடா்வதற்கான அனுமதியை திரும்பப் பெற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தற்போதைய முதல்வா் ஸ்டாலின், அமைச்சா் பொன்முடிக்கு எதிரான வழக்கை உரிய நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து வழக்கு தொடர முடியுமா?

அதுவும், 15 - 20 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவை எதிா்த்து தற்போது வழக்கு தொடர முடியுமா? என்பது குறித்து தீா்ப்புகளை மேற்கோள்காட்டி விளக்கமளிக்க மனுதாரா் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com