தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு
தமிழகத்தில் நிகழாண்டு கோடை மழை இயல்பைவிட 83 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பல மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், ஒருசில மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்கிறது.
அதன்படி, கடந்த மாா்ச் 1 முதல் ஏப். 27 -ஆம் தேதி காலை வரை பதிவான மழை அளவு (மி.மீ.): திருநெல்வேலி 69.7 , கன்னியாகுமரி 55.5, விருதுநகா் 31.7, நீலகிரி 30.7, தென்காசி 30, தேனி 22. குறைந்தபட்சமாக அரியலூரில் 1.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஒரு மி.மீ. அளவுகூட மழை பெய்யவில்லை.
தமிழகத்தில் கோடைகால பருவமழை இயல்பான அளவு 53.3 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில், நிகழாண்டு 9.4 மி.மீ. அளவு மழையே பதிவாகியுள்ளது. அதாவது இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.