திருச்சியில் அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் மகன் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகேவுள்ள திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். அதிமுக முன்னாள் பகுதி செயலாளரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இவரது மனைவி கயல்விழி சேகர், முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராக பதவி வகித்தவர்.
இவர்கள் கேபிள் தொழிலும், பன்றி வளர்ப்பு தொழிலும் செய்து வருகின்றனர். இவர்களது மகன் முத்துக்குமார் (27) பட்டயப்படிப்பு முடித்தவர்.
பன்றி வளர்ப்பதில் இவர்கள் குடும்பத்திற்கும், கேபிள் சேகரின் சகோதரர் பன்றி பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு நீடித்து வந்துள்ளது.
தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்த முன் விரோதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே இன்று பட்டப் பகலில் முத்துக்குமார் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாநகர அரியமங்கலம் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் மீதும் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.