
சென்னை: தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மாணவா்கள் மீண்டும் அவற்றைப் பெறுவதற்கான அறிவுறுத்தல்களை தோ்வுத்துறை வழங்கியுள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஃபென்ஜால் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சான்றிதழ்களை இழந்த மாணவா்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கும்படி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதன்படி, இந்த மாவட்டங்களில் வெள்ளத்தால் மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2, ஆசிரியா் பட்டயத் தோ்வு மாணவா்கள், மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கலாம். மேலும், தங்கள் மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்களுக்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை இழந்திருப்பின் ஒவ்வொரு மதிப்பெண் சான்றிதழுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.