எஃப்ஐஆரை காவல்துறை வெளியிடவில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் திங்கள்கிழமை இரவு கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த அடையாளம் தெரியாத நபர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார்.
இதுதொடர்பாக ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் மாணவியின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை இணையத்தில் பதிவேற்றப்பட்டு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்தது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
உயர்நீதிமன்றம் இதனை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் முறையிட்ட நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு இந்த விவகாரத்தில் உள்துறைச் செயலர், டிஜிபி உள்ளிட்டோர் பதிலளிக்கக் கோரியது.
அதன்படி, முதல் தகவல் அறிக்கையை(எஃப்ஐஆர்) காவல்துறை வெளியிடவில்லை என்றும் இணையதளத்தில் வெளியான முதல் தகவல் அறிக்கை உடனடியாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வழக்கு தொடர்பான விரிவான அறிக்கை சீல் வைத்த உறையில் தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இதையடுத்து நீதிபதிகள், தலைமை நீதிபதியின் உத்தரவு பெற்றபிறகு வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று கூறியதுடன், ரிட் வழக்காக தாக்கல் செய்தால் உடனடியாக விசாரிக்கப்படும் என்று கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.