Annamalai
அண்ணாமலை (கோப்புப்படம்)எக்ஸ்

மாணவி பாலியல் வழக்கில் ஏன் முரண்பாடுகள்? உண்மையில் என்ன நடந்தது? - அண்ணாமலை கேள்வி

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் என்ன நடந்தது? - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி.
Published on

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் என்ன நடந்தது? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணை செல்லும்விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது எனவும் அண்ணாமலை வழக்கு குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியதற்கும், காவல்துறை ஆணையர் பேசியதற்கும் முரண்பாடு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும்விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது.

உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று ஊடகங்களில் பேசுகையில், முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

ஆனால், நேற்று ஊடகங்களைச் சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர், பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல்துறைக்குப் புகார் வந்தது என்று கூறுகிறார்.

ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது?

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன.

ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்வரை தமிழக பாஜக இதனை விடப்போவதில்லை.

பிரச்னையை மடைமாற்றி, உண்மையை மறைத்துவிடலாம் என்ற நோக்கம் திமுக அரசுக்கு இருக்குமேயானால், திமுக அரசுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகத்தான் கருத முடியும்' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com