அவிநாசி: கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருணையாத்தா அவிநாசியப்பா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி உயிருடன் மீட்ட தலமாகவும் விளங்கும் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கும்பாபிஷேக விழா ஜனவரி 24-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இதையடுத்து ஜனவரி 29-ஆம் தேதி முதல் கால யாக பூஜை தொடங்கி, பிப்.1-ஆம் தேதி வியாழக்கிழமை காலை வரை 5 கால யாக பூஜை நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கொடிமரம், கனகசபை, பாலதண்டாயுதபாணி கோயில், துர்க்கை, சண்டிகேஸ்வரர், 63 நாயன்மார்கள் உள்ளிட்ட 42 பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.
கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் கூட்டம்.
முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை காலை 8 -ஆம் கால யாக பூஜை நடத்தப்பட்டு, கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசியப்பர் கோயில், வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமண்யர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், சிவாச்சாரியர்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் ட்ரோன் மூலம் அனைவருக்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதிகாலை முதலே காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கருணையாத்தா, அவிநாசியப்பா கோஷம் முழங்க சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
ட்ரோன் மூலம் அனைவருக்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டது
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் வளாகம், மங்கலம் சாலை, சேவூர் சாலை பிரிவு, கிழக்கு தெற்கு, மேற்கு , வடக்கு ரத வீதிகள், கோவை நெடுஞ்சாலை, வீர ஆஞ்சநேயர் கோயில், கரிவரதராஜப் பெருமாள் கோயில் என அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தையடுத்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனைகள் நடைபெற்றது.