ஏர்வாடி: தமிழகத்தில் திருநெல்வேலி, கோவை, மதுரை உள்பட 8 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை அதிகாலை முதல் தேசிய முகமை அதிகாரிகள்(என்ஐஏ) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை காா் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் ரகுமான் வீடு உள்பட 12 இடங்களில் சனிக்கிழமை அதிகாலை முதல் தேசிய முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி முகைதீன்நகர் ரஜப் தெருவை சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது(38).இவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை இவரது வீட்டிற்கு வந்த தேசிய புலனாய்வு முகமை கூடுதல் கண்காணிப்பாளர் பரத்நாயக் தலைமையிலான 3 அதிகாரிகள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி அவரது வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் சோதனையால் ஏர்வாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு ஏர்வாடி பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஏர்வாடியில் மீண்டும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காா் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் தேசிய முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.