தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பேரவையில் உரையாற்றினார்.
தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநரை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வரவேற்றார்.
தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவும், முடிந்த பிறகும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையில் உடன்பாடு இல்லை எனத் தெரிவித்த ஆளுநர் 2 நிமிடத்தில் உரையை முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்தாய் வாழ்த்தும், கூட்டம் நிறைவடையும் போது தேசிய கீதம் இசைக்கப்படுவதே மரபாக உள்ளது.
மேலும், தமிழக அரசின் நிகழ்ச்சிகள், பள்ளி நிகழ்ச்சிகள் என அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, ஆளுநர் படிக்காத உரையை தமிழ் மொழிபெயர்ப்பை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு படித்தவுடன், கூட்டம் நிறைவடைவதற்கு முன்னதாகவே பேரவையில் இருந்து ஆளுநர் புறப்பட்டுச் சென்றார்.
ஆளுநர் வெளியேறும் போது, இனிமேல் தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
மேலும், ஆளுநர் படிக்காத உரையை பேரவைக் குறிப்பில் இடம்பெறுவதற்கு அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.