தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானங்களை இன்று முன்மொழிந்தார்.
இந்த தீர்மானம் குறித்து பேசிய அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், “ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் தேர்தல் செலவுகளை குறைப்பது, தமிழக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது உள்பட 10 கோரிக்கைகள் மத்திய அரசிடம் அதிமுக வைத்துள்ளது. அவற்றை நிறைவேற்றினால் மட்டுமே ஆதரிப்போம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், “மக்கள் தொகை குறையும்போது, நமக்கான பிரதிநிதிகள் மத்தியில் குறையுமோ என்கிற தமிழகத்தின் அச்சம் நியாயமானது, புரிந்துக்கொள்ள முடிகிறது. இது தொடர்பாக மத்தியில் பேசுவோம். ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அறிவிப்பில் உள்ளாட்சித் தேர்தல் சேர்க்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு தனித் தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.