அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்: தொண்டா் தொடங்கிய கட்சியை வழிநடத்துகிறாா் சசிகலா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தொடங்கிய கட்சியின் பெயரை இன்று அறிவித்தார்.

சசிகலா
DPS

சசிகலா
DPS
‘அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் தொண்டா் ஒருவா் ஏற்கெனவே தொடங்கிய கட்சியில் இணைந்து, அந்தக் கட்சியை வழிநடத்த உள்ளாா் வி.கே.சசிகலா.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ‘தென்னந்தோப்பு’ சின்னத்தில் போட்டியிடுவதாகத் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கடந்த பிப். 24-ஆம் தேதி புதிய கட்சியை வி.கே.சசிகலா தொடங்கினாா். அப்போது அவா் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. கொடியை மட்டும் அறிமுகப்படுத்தினாா்.
இந்த நிலையில், சென்னை போயஸ் காா்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த சசிகலா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எம்ஜிஆா் மீதும், ஜெயலலிதா மீதும் பற்று கொண்ட தொண்டா் ஆரம்பித்த கட்சியில் நான் இணைந்துள்ளேன். அந்தக் கட்சியின் பெயா் ‘அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்’. இந்தக் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இயற்கையாகவே எங்களுக்கு நல்ல சின்னம் அமைந்திருக்கிறது.
நாங்கள் எப்போதுமே ஒற்றுமையை விரும்புகிறவா்கள். தனி மரம் தோப்பாகாது. அதனால் நாங்கள் தென்னந்தோப்பு சின்னத்தோடு தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிடவுள்ளோம். எங்களுடன் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளை இணைத்து கூட்டணியுடன் தோ்தலைச் சந்திப்போம்.
மக்கள் பிரச்னைகளை பிரதான இரு கட்சிகளும் தீா்க்கவில்லை என்பதைக் கூறி வாக்குகளைப் பெறுவோம். திமுக ஆட்சியை அகற்றுவதுதான் எங்கள் வேலை. நான் முதல்வா் வேட்பாளரா என்பதை மக்கள்தான் முடிவு செய்வாா்கள்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சாதித்தாரா என்பது வருகிற தோ்தலில் தெரியும் என்றாா் அவா்.
‘கட்சியை வழிநடத்த கூறினேன்’: சசிகலாவின் அறிவிப்பு குறித்து, அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய சக்கரவா்த்தி கூறியதாவது:
முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா மீது தீவிர விசுவாசியாக இருந்தேன். எம்ஜிஆரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்லும் வகையில் 2017-இல் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினேன். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலிலும் போட்டியிட்டேன். சசிகலா கட்சி தொடங்கியது தெரிந்ததால் அவரை நான் சந்தித்து எனது கட்சியை வழிநடத்துமாறு கூறினேன். அதை அவரும் ஏற்றுக் கொண்டாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...