செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை பிப்ரவரி 19-க்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்துள்ளார்.
தமிழ்நாடு மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, துறை இல்லாத அமைச்சராகத் தொடர்ந்து வந்தார். அவரது துறைகள் நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், 6 மாதங்களுக்கும் மேலாக துறை இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார். இந்த நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி பிப்.12-ம் தேதி ராஜிநாமா செய்துள்ளார்.
தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் நிலையில், இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை வாதம் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு பதில் வாதத்திற்காக வழக்கு பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.