
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை சா.பெருமாள்சாமி கவுண்டர் (94) வெள்ளிக்கிழமை காலமானார்.
திருப்பூர் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்,மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்த ஊர் முத்தூராகும். முத்தூர் வேலம்பாளையம் பங்களா தோட்டத்தில் அமைச்சரின் தந்தை சா.பெருமாள்சாமி கவுண்டர் (94) வசித்து வந்தார்.
அவர் வயது மூப்பு, உடல்நலம் குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.
அவருடைய இறுதிச் சடங்குகள் முத்தூர் வேலம்பாளையத்தில் உள்ள அமைச்சரின் பூர்வீக வீட்டில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சா.பெருமாள்சாமிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்பட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் தந்தை முத்தூர். சா. பெருமாள்சாமி மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.
தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததைக் குறிப்பிட்டார்.
பெருமாள்சாமியை இழந்து தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.