பென்னாகரம்: ஏரியூர் அருகே செல்ல முடி பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை முறையாக வினியோகிக்கக் கோரி 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே செல்ல முடி, வடிவேல் கவுண்டனூர் ஆகிய இரு கிராமப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்புகளுக்கு செல்ல முடி பகுதியில் இருந்து ஆழ்துளை கிணற்றின் மூலம் நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கோடை காலம் துவங்கும் முன்பே வறட்சி நிலவி வரும் நிலையில் செல்லமுடி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் நீரின் அளவு குறைந்துள்ளது. மேலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், போதுமான குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு குறித்து கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த மூன்று நாட்களாக மிகுந்த குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவித்து ஏரியூர் - மேச்சேரி செல்லும் சாலையில் செல்லமுடி பேருந்து நிறுத்தத்தில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மஞ்சார அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன் ஆகியோர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம்,
செல்லமுடி, வடிவேல் கவுண்டனூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்குள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் முறையாக வினியோகம் செய்யக்கோரி நடைபெற்ற சாலை மறியலால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியது.