கடந்த 3 ஆண்டில் திமுக எந்தவொரு திட்டத்தையும் திறந்துவைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக ஆட்சிகால திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவைத்ததைத் தவிர, வேறு எந்த திட்டத்தையும் திமுக நிறைவேற்றவில்லை எனவும் விமர்சித்தார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் திமுகவினரே போதைப்பொருள்களைக் கடத்துகின்றனர். திமுகவினரே போதைப்பொருள்களைக் கடத்துவதால், அதன் விற்பனையை பொதுவெளியில் அவர்களால் தடுக்க முடியவில்லை. மக்களைப் பற்றி திமுகவுக்கு கவலையில்லை.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் போதிய நிவாரணம் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கும். திமுகவின் 38 எம்.பி.க்கள் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஒருசேர தமிழ்நாட்டிற்காக குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்யவில்லை.
திமுக மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதனை திசைதிருப்பவே மத்திய அரசு மீது புகார் கூறி வருகின்றனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்ததைத் தவிர வேறு எந்தவொரு திட்டத்தையும் திமுக நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.