டிடிவி தினகரனும், பன்னீர் செல்வமும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
டிடிவி தினகரனும், பன்னீர் செல்வமும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராயபுரத்தில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு அண்ணதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் தேதி அறிவித்ததும் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். தேர்தல் தேதி அறிவித்த பிறகு அதிமுகவின் கூட்டணி குறித்து முறையான அறிவிப்பை பொதுச்செயலாளர் வெளியிடுவார். பாஜகவின் பூச்சாண்டி வேலை அதிமுகவிடம் எந்த காலத்திலும் எடுபடாது.
பாஜக, டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் இவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெங்காயத்தைப் போல் உரிக்க உரிக்க தோலாக தான் இருப்பார்கள் உள்ளே ஒன்றும் இருக்காது. தமிழக முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமை ஆணையம் அமைத்துவிட்டு, பின்னர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய போது ஓடிப்போய் ஒளிந்தவர்தான் பன்னீர்செல்வம். டிடிவி தினகரனும், பன்னீரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.
காசு பணம் துட்டு மணி என்பதுதான் திமுக அரசுக்கும், நிர்வாகிகளுக்கும், உள்ள தாரக மந்திரமாக உள்ளது என்றார். பள்ளிக்கரணையில் நடைபெற்ற ஆணவ கொலை குறித்து பேசிய அவர், சமூக நீதி இருப்பதாக கூறும் திமுக ஆட்சியில் தான் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு தமிழகம் தான் தலைநகரம் போல் மாறிவிட்டது எனவும் குறிப்பிட்டார்.