விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியை காலியானதாக அறிவித்து தேர்தல் ஆணையத்துக்கு தமிழக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயதரணி. இவர் கடந்த வாரம் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, விஜயதரணியை தகுதிநீக்கம் செய்யக் கோரி சட்டப்பேரவைத் தலைவருக்கு தமிழக காங்கிரஸ் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையே, விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக விஜயதரணி அறிவித்தார்.
இந்த நிலையில், விஜயதரணியின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டு விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக சட்டப்பேரவை செயலாளர் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனால், வரும் மக்களவைத் தேர்தலுடன், விளவங்கோடு சட்டப்பேரவைக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.