கோயம்பேட்டில் பேருந்து ஏற முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண வித்தியாசத் தொகை நடத்துநர் திருப்பித் தருவார் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கத்தில் சுமாா் ரூ.400 கோடியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட பேருந்து முனையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்துவைத்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இப்பேருந்து முனையம் முழுவதுமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இதுவரை கோயம்பேட்டிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சென்று வந்த அரசு விரைவுப் பேருந்துகள், இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும். இதனிடையே அரசு விரைவுப் பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்திலிருந்து முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கோயம்பேட்டில் பேருந்து ஏற முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண வித்தியாசத் தொகை திருப்பித் தரப்படும். பயணம் தொடங்கும்போதே நடத்துநர்களால் தொகை வழங்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கட்டண வித்தியாசத் தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பயணம் தொடங்கும்போதே நடத்துநர்களால் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.