திருச்சி: புத்தாண்டின் முதல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா, திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர், மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, புத்தாண்டின் முதல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற பாரதிதாசனின் கவிதை வரிகளை தமிழில் மேற்கோள் காட்டிய பிரதமர், நன்றி சொல்லி உரையை முடித்தார்.
இந்த விழாவை தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சென்று புதிய முனையத்தை திறந்து வைக்கவுள்ளார்.
மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து, பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.