அவிநாசி: சேவூர் பந்தம்பாளையத்தில் மீண்டும் திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடை, மனமகிழ் மன்றத்தை மூடக் கோரி வேட்டுவபாளையம், சேவூர், முறியாண்டம்பாளையம் ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூர் பந்தம்பாளையம் பகுதியில் அரசு மதுபானக் கடை, மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த ஒராண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. 3 ஊராட்சிகளை மையப்படுத்தி உள்ள இந்தப் பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. இங்கு மதுக்கடை அமைக்க கூடாது என முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் மனு அளித்தோம்.
மேலும் வேட்டுவபாளையம், சேவூர், முறியாண்டம்பாளையம் ஆகிய 3 ஊராட்சிகளின் கிராம சபை கூட்டங்களிலும் இந்த மதுபானக் கடைக்கு அனுமதி வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இருப்பினும் கடந்த செப்டம்பர் மாதம் மதுபானக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டது.
இதையடுத்து, அப்போதே ஒரு நாள் முழுவதும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், வருவாய்த் துறையினர் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
தொடர்ந்து, ஒரு வாரம் மட்டும் மூடப்பட்டிருந்த மதுபானக் கடை மீண்டும் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறோம். ஆகவே உடனடியாக நிரந்தரமாக கடையை மூட வேண்டும் என்றனர்.
வேட்டுவபாளையம், முறியாண்டம்பாளைம், சேவூர் பகுதிகளச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்டோர் திரண்டுள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.