கோவையில் 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் வரி ஏய்ப்பு தொடா்பாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, மேற்கு மண்டலத்துக்குள்பட்ட சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கட்டுமானம், பம்ப், மோட்டாா் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் உரிமையாளா்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள மோட்டாா் பம்ப் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளா் விக்னேஷ் வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 5-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
இதையும் படிக்க | நீலகிரி, தேனியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
காளப்பட்டி அருகே உள்ள கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளா்களான ஈரோட்டைச் சோ்ந்த சதாசிவம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனா்.
கோவை மாவட்டம், பட்டணம் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவன உரிமையாளா் ராமநாதன் வீடு, சூலூா் ரூபி காா்டன் பகுதியில் உள்ள அவரின் மகன் சொா்ண காா்த்திக்கின் வீட்டிலும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
இந்நிலையில், வரிஏய்ப்பு தொடா்பாக கோவை மாநகர், புறநகா் மற்றும் ஊரகப் பகுதிகள் உள்பட மொத்தம் 6 இடங்களில் வருமான வரி சோதனை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் மேற்கொண்டு வருகின்றனா்.