திருப்பத்தூரில் அரசுப் பேருந்தில் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பலி
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் தியான வகுப்புக்கு சென்ற இரு இளைஞர்கள் அரசுப் பேருந்தில் மோதிய விபத்தில் தலைநசுங்கி சம்பவ இடத்தில் பலியாகினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அடுத்த முல்லை பகுதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் பிரவீன் குமார் (27), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்குமார் (24) ஆகிய இருவரும் திருப்பத்தூரில் உள்ள தியான வகுப்புக்கு நாள்தோறும் சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில், தியான வகுப்புக்கு வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தபோது திருப்பத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆலங்காயம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பள்ளி வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் முன்பு சென்றதால் அதை முந்தி செல்லதற்காக, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் சென்றபோது நேர் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையும் படிக்க | கணவரை காா் ஏற்றி கொலை செய்த மனைவி உள்பட 2 போ் கைது!
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த குருசிலாப்பட்டு போலீசார், இரண்டு இளைஞர்களின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தியான வகுப்புக்கு சென்ற வாலிபர்கள் அரசுப் பேருந்தில் விபத்து ஏற்பட்டு தலை நசுங்கி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.