கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஜன. 30, 31 ஆகிய தேதிகளில் மாஸ்டா் நீதிமன்றத்தில் (உயா்நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி அந்தஸ்தைக் கொண்ட நீதிமன்றம்) ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடா்புபடுத்தி காணொலி
வெளியிட்ட தில்லியைச் சோ்ந்த பத்திரிகையாளா் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையாா் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி, ரூ. 1 கோடியே 10 லட்சம் நஷ்ட ஈடு கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டா் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எட்பபாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை ஏற்ற உயா்நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்குரைஞா் ஆணையராக எஸ்.காா்த்திகை பாலனை நியமித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமா்வு, எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கூறக்கூடிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை; சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக் கூறி, உரிய அறிவுறுத்தல் வழங்கும்படி இபிஎஸ் தரப்பு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டனா்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிசாமியிடம் அறிவுறுத்தி உள்ளதாக அவரது வழக்குரைஞா்கள் நீதிபதிகளிடம் தெரிவித்தனா். பொங்கல் விடுமுறை மற்றும் சட்டப்பேரவை நடைபெற உள்ளதால் அதன்பின்னா் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னா் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஜனவரி 30, 31 ஆகிய 2 நாள்கள் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.