திறன் மேம்பாட்டு பயிற்சியில் தமிழ்நாடு முன்னோடி: பல்கலைக்கழக நிதி நல்கை குழுத் தலைவர்

திறன் மேம்பாட்டு பயிற்சியில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது என்று பல்கலைக்கழக நிதி நல்கை குழுத் தலைவர் எம். ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.
மாநாட்டில் பேசிய பல்கலைக்கழக நிதி நல்கை குழுத் தலைவர் எம். ஜகதீஷ் குமார்.
மாநாட்டில் பேசிய பல்கலைக்கழக நிதி நல்கை குழுத் தலைவர் எம். ஜகதீஷ் குமார்.

தஞ்சாவூர்: திறன் மேம்பாட்டு பயிற்சியில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது என்று பல்கலைக்கழக நிதி நல்கை குழுத் தலைவர் எம். ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென் மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டில்தான் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்பட மிக உயரிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதேபோல சென்னை ஐஐடி உள்ளிட்ட மிகச் சிறந்த மத்திய கல்வி நிறுவனங்களும் இங்குதான் இருக்கின்றன.

இதன் மூலம், தமிழ்நாட்டில் மிகச் சிறந்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, திறமையான மனித வளம் உருவாக்கப்படுவதால், தொழில் ரீதியாகவும் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாட்டின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.

ஆனால் உலக அளவில் கல்வித் துறை போட்டி நிறைந்ததாக உள்ளது. எனவே உலகளாவிய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு இணையாக நம்முடைய கல்வி நிறுவனங்களின் தரத்தையும் மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் சிறந்த திறனைப் பெறும் வகையில் நம்முடைய கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் இருந்து மாணவர்கள் சேர்க்கை முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் சரி சமமாக சேரும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த ஓராண்டாக முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மண்டல வாரியாக மொத்தம் 5 மண்டலங்களில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. ஏற்கெனவே மேற்கு மற்றும் வடக்கு மண்டலத்தில் மாநாடு நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து மூன்றாவதாக தஞ்சாவூரில் தென் மண்டல மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 200-க்கும் அதிகமான துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு சுதந்திரம், நெகிழ்வுத்தன்மை, வாய்ப்புகள் போன்றவற்றை வழங்கும் விதமாக இந்தத் தேசிய கல்விக் கொள்கை உள்ளது. நம்முடைய கல்வி நிறுவனங்கள் மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும். கல்வி நிறுவனங்களும், கல்வியாளர்களும் கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொண்டு மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்க முன்வர வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் சிறந்த மாற்றத்தை உருவாக்க முடியும் என்றார் ஜகதீஷ் குமார்.

மாநாட்டில் தேசிய தொழிற் கல்வி மற்றும் பயிற்சி குழுத் தலைவர் நிர்மல் ஜித் சிங் கால்சி, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைகழகத் துணைவேந்தர் எஸ். வைத்திய சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com