புதுச்சேரி: புதுச்சேரி வணிக வரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு புகார்கள் எதிரொலியாக, புதுச்சேரி வணிக வரி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய அதிகாரிகள், 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி 100 அடி சாலையில் வணிகவரித்துறை அலுவலகம் உள்ளது. இங்குள்ள அதிகாரிகள் புதுவையில் உள்ள தொழிற்சாலைகள், வணிகர்கள், வர்த்தக நிறுவனங்களிடம் வரி வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு வரி வசூலில் முறைகேடு நடப்பதாக புகார் வந்தது.
இதையும் படிக்க.. தமிழகத்தில் இளம் மருத்துவர்கள் தற்கொலையின் அதிர்ச்சி தரும் பின்னணி
இதன் பேரில் நடத்தப்பட்ட ஆய்வின் போது, வணிகவரித்துறை அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது.
இதன் பேரில் புதுச்சேரியில் முகாமிட்டு இருந்த 5 பேர் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழு, வணிகவரித்துறை அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். பின்பு ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.
சில ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். விசாரணையையொட்டி வணிகவரித்துறை அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அலுவலகத்துக்குள் யாரையும் பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. பின்பு முகத்தை மூடிய ஒரு நபரை அலுவலகத்துக்குள் சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். வணிகவரித்துறை அலுவலகத்தில் விசாரணை செய்தபோது, அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் அந்த நபரை அழைத்து வந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.