தமிழ்நாடு மட்டுமின்றி தென்தமிழகத்திற்கும் அதிகப்படியான வளர்ச்சி இருக்கும் என தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு 2024 நடக்கிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். இதில், 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அமெரிக்கா, ஜொ்மனி, பிரான்ஸ், டென்மாா்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூா், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், தொழில்நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே நந்தம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, எதிர்பார்த்ததைவிட முதலீட்டாளர் மாநாடு சிறப்பாக நடந்து வருகிறது. இதுவரை சென்னையை சுற்றிமட்டுமே இருந்துவந்த வளர்ச்சி, தற்போது சென்னை மட்டுமின்றி தென்தமிழகத்திற்கும் கிடைக்கவுள்ளது.
சென்னை மட்டுமே வளர்ச்சிபெறுகிறது என இனி யாரும் சொல்ல முடியாது. தென் தமிழகத்திலும் அதிக முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பரந்தூர் தவிர மேலும் சில விமானநிலையங்கள் அமைக்கும் திட்டம் உள்ளது எனக் குறிப்பிட்டார்.