சென்னை: பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது என்று சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பிரதான போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிற்சங்க ஓட்டுநர்களை வைத்து இரண்டு நாள்களாக 95 சதவிகிதத்துக்கும் மேல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “பொங்கல் பண்டிகையின்போது வேலைநிறுத்தப் போராட்டம் தேவையா? பண்டிகை காலத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், வேலை நிறுத்தப் போராட்டத்தால் நகர்புற மக்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமங்களுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் போராட்டம் நடத்த உரிமை இல்லை எனக் கூறவில்லை, பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது என்றுதான் கூறுகிறோம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
போராட்டத்தை இந்த மாத இறுதிக்கு ஒத்திவைப்பது குறித்து தொழிற்சங்கத்தினரும், ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து அரசுத் தரப்பும் பதிலளிக்கக் கோரி பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.