கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்பாக இதுவரை எந்தவிதமான திட்டமிடலும் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளையொட்டி சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று நேரில் சென்று பார்வையிட்டு, கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் விவசாயிகளிடமும், அங்கு தூய்மைப் பணிகளில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு புதிய சிஇஓ நியமிக்கப்பட்டு உள்ளார். மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக செய்து தரப்படும். கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்பாக இதுவரை எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் மக்களுக்கு தேவையானதை செய்ய இருக்கிறோம். அதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்கப்படும்.
பண்டிகை காலங்களில் அதிகப்படியான மக்கள் கூடும் பொழுது சிறிய, சிறிய தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜன.24ம் தேதியில் இருந்து ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து முழுமையாக இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.