மண்ணச்சநல்லூர்: பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக்கோயில். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாகவும், பிரசித்தி பெற்ற இத்தலத்தில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்க கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. உற்சவ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தோடு எழுந்தருளினார். தொடர்ந்து பூஜைகளுக்கு பிறகு கொடிமரத்தில் ஒம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க தைப்பூச திருவிழா கொடியேற்றப்பட்டது.
விழாவில் இன்று உற்சவ அம்மன் மரகேடயத்திலும், ஜன.17ம் தேதி அம்மன் மரசிம்ம வாகனத்திலும், ஜன.18ம் தேதி அம்மன் மர பூத வாகனத்திலும், ஜன.19ம் தேதி மர அன்ன வாகனத்திலும், ஜன.20ம் தேதி மர ரிஷப வாகனத்திலும், ஜன. 21ம் தேதி மர யானை வாகனத்திலும், ஜன 22 ஆம் தேதி வெள்ளி சேஷ வாகனத்திலும், ஜன.23ம் தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும் புறப்பாடு நடைபெறும்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஜன 24 ஆம் தேதி தெப்பத்திருவிழாவும், ஜன.25 ஆம் தேதி காலை அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி வழி நடை உபயம் கண்டருளி நொச்சியம் வழியாக வட திருக்காவேரிக்கு சென்றடைதலும் நிகழ்வும், ஜன.25ம் தேதி இரவு விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடம் சீர்பெறும் நிகழ்வும்.
ஜன 26 ம் தேதி இரவு 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகமும், தொடர்ந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தல் நிகழ்வும் நடைபெறும்.
இதையும் படிக்க: பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது!
இந்நிகழ்வில் திருக்கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.