சென்னை, கொரட்டூரில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணின் மீது அரசுப் பேருந்து மோதியதில் தலை நசுங்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொளத்தூர், பூம்புகார் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வித்யா. திருமணமான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
கொரட்டூர் வடக்கு பகுதி சிக்னல் அருகே பேருந்துக்காக காத்திருந்த வித்யா மீது கோயம்பேட்டிலிருந்து செங்குன்றம் வரை செல்லும் தடம் எண் 114 கொண்ட பேருந்து வித்யா மீது மோதியதில் முன் சக்கரத்தில் சிக்கிய வித்யா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தப்பிக்க முயன்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பேருந்து ஓட்டுநர் ரமேஷை பொதுமக்கள் தாக்கியதில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டது. போலீசார் ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சிக்னலில் பேருந்து நிற்காமல் சென்றது விபத்துக்கான காரணம் எனத் தெரிய வந்துள்ளது. பரபரப்பான சாலையில் பெண் ஒருவர் மாநகரப் பேருந்து ஏரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.