அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்த்தில் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மாா்ச் 18-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, இங்கு இரவு, பகலாக பணிகள் நடைபெற்றன. ஏறத்தாழ 10 மாதங்களில் பணிகள் முழுமைப் பெற்று ரூ. 62.77 கோடியில், 83,462 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டது.
உலகின் முதல் பிரம்மாண்ட ஏறுதழுவுதல் அரங்கமாகக் குறிப்பிடப்படும் இந்த அரங்கத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 24) திறந்துவைத்தார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளுக்கான பதிவு, இணையதளத்தில் கடந்த 19-ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் 20-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியையொட்டி 2000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.