விருதுநகர்: விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில், மருந்துக் கலவை உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் நிகழ்வு இடத்தில் பலியாகினர்.
விருதுநகர் அருகே வச்சா காரப்பட்டி பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பட்டாசுக்கான மருந்து தயாரிப்பு அறையில், உராய்வுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையில் பணியில் ஈடுபட்டிருந்த கன்னி சேரி புதூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் மகன் காளிராஜ் (20), முதலிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் வீரக்குமார் (50) ஆகியோர் நிகழ்விடத்தில் பலியாகினர்.
மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கன்னி சேரி புதூரை சேர்ந்த சரவணகுமார் (25), இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (17) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஆளுநர் தேநீர் விருந்து: திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு
இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த நான்கு அறைகள் சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து வச்ச காரப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.