தஞ்சைப் பெரிய கோயிலில், சுட்டெரிக்கும் வெயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தொடர் விடுமுறையால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோவிலில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. கோவிலின் கட்டட அழகையும் - சிற்ப அழகையும் காண்பதற்கு உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
இதையும் படிக்க.. பவதாரணியின் மறைவையொட்டி... புற்றுநோய்: வலியும் வாழ்வும்
இந்நிலையில் குடியரசு தினம் மற்றும் தைப்பூசம் ஆகியவற்றின் தொடர் விடுமுறையால் இன்று தஞ்சைப் பெரிய கோவிலில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பெரிய கோவில் சாலை முற்றிலும் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் குடை பிடித்தவாறு பொதுமக்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் - முதியவர்கள் பாதிக்கப்படுள்ளனனர். எனவே கோயிலில் நிலற்கூரை அமைக்கவும், தரை விரிப்பான், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.