
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க 562 கிராம அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிராம அளவிலான கண்காணிப்புக் குழுவை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் ஜூன் 18-ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததாக பலர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அடுத்தடுத்து 65 பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்ததாக கூறப்படுகிறது. இதனை விற்பனை செய்த மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் அழிக்கும் விதமாக, கிராம நிர்வாக அலுவலரை தலைவராகக் கொண்ட 562 கிராம அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் கிராம உதவியாளர், ஊராட்சி அளவிலான மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், ரோந்து பணிக் காவலர், பெண் சுகாதார தன்னார்வலர் ஆகியோரை உறுப்பினர்களாக நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவின் உறுப்பினர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் கடத்துதல் ஆகியவற்றைக் கண்டறிந்து அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது காவல் துறை உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கஞ்சா, குட்கா, பான்மசாலா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் காவல் துறை உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.