புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சீசன் டிக்கெட் பயணிகளிடமும் செல்போன் எண் வாங்குவதா? ரயில்வேக்கு எதிர்ப்பு!

சீசன் டிக்கெட் பயணிகளிடம் செல்போன் எண் வாங்குவதாகக் கூறி ரயில் பயணிகள் தெற்கு ரயில்வேயின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2024, 6:50 am

DIN

தெற்கு ரயில்வே சீசன் டிக்கெட் பயன்படுத்தும் பயணிகளிடம் டிக்கெட் வழங்குமிடத்தில் செல்போன் எண் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சீசன் டிக்கெட்டுகளைப் பெறவோ, புதுப்பிக்கவோ வரும் முன்பதிவு செய்யப்படாத பயணிகளிடம் தெற்கு ரயில்வே செல்போன் எண்களைக் கேட்டு வாங்கி வருகின்றனர். இது தனியுரிமையை மீறுவதாக பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, ரயிலில் முன்பதிவு செய்யும் பயணிகளிடம் மட்டுமே பயண விவரங்கள் குறித்து செய்தி அனுப்ப செல்போன் எண் வாங்கப்படும். ஆனால், முதல்முறையாக முன்பதிவு செய்யப்படாத பயணிகளிடமும் மொபைல் எண் வாங்கப்படுவதால் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டிக்கெட் வழங்குமிடத்தில் பயணிகளின் செல்போன் எண் கேட்கப்பட்டு, அவற்றை ஊழியர் ஒருவர் கைப்பட எழுதி குறித்துக் கொள்வதாகவும், இது கட்டாயம் என்று கூறுவதாகவும் பயணிகள் தெரிவித்தனர். இதனை விமர்சித்துள்ள ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு கமிட்டி, இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லாமல் வெறும் வாய்மொழி உத்தரவாக மட்டுமே கூறப்பட்டுள்ளதாகவும், இப்படி செல்போன் எண்ணை வாங்குவது தனியுரிமை மீறல்களில் வருவதாகவும் கூறுகின்றனர்.

மானிய விலையில் சீசன் டிக்கெட்டுகளைப் பெறும் பயணிகளின் அடிப்படைத் தகவல்களை சேகரிப்பதற்காகவே அவர்களின் செல்போன் எண் கேட்கப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தனியுரிமை மீறல் குறித்து அவர் பதிலளிக்கவில்லை.

சென்னையில் வேலை பார்க்கும் பெரும்பாலான மக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் வேலூர் பகுதிகளில் இருந்து வருகின்றனர். தினசரி 660 ரயில் சேவைகளுடன், சென்னை கோட்டத்தில் 11.5 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர்.

ஒரு நாளைக்கு 7 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்துகின்றனர். அதில் முதல் வகுப்பு சீசன் டிக்கெட் பயன்படுத்துவோர் அதிகபட்சமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பயணிக்கின்றனர். சீசன் டிக்கெட்டுகள் சென்னை கோட்டத்தின் 160 கி.மீ சுற்றுவட்டாரத்துக்குள் வழங்கப்படுகின்றன.

”சீசன் டிக்கெட்டுகள் மாற்ற முடியாதவை. செல்போன் எண் போன்ற அடிப்படைத் தகவலைக் கேட்டு வாங்குவது வழக்கத்திற்கு மாறான விஷயமில்லை” என்று தெற்கு ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.