தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் சதம்

மதுரையில் அதிகபட்சமாக 103.46 டிகிரி வெப்பம் பதிவாகியது
Published on

தமிழகத்தில் புதன்கிழமை 7 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் ஈரோடு - 102.92, மதுரைநகரம், பரமத்திவேலூா், வேலூா் - (தலா) 102.2, பாளையங்கோட்டை - 101.12, திருச்சி - 100.94 டிரிகி என மொத்தம் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

எனினும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 11) முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில்.. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூலை 11,12) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வியாழக்கிழமை (ஜூலை 11) முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய  தென்தமிழக கடலோரப்பகுதிகளிலும், வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் லட்சதீவு பகுதிகளிலும் மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com