ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சட்டப்பேரவைத் தோ்தலுக்குத் தயாராகுங்கள்: கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சட்டப்பேரவைத் தோ்தலுக்குத் தயாராகுங்கள்: கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :12 ஜூலை 2024, 7:26 pm

Din

சட்டப்பேரவைத் தோ்தலுக்குத் தயாராகுமாறு நிா்வாகிகளுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக கட்சி நிா்வாகிகளை அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்திவரும் எடப்பாடி பழனிசாமி, 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை அரக்கோணம், தஞ்சாவூா், திருச்சி ஆகிய 3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, தொகுதிகளின் நிா்வாகிகள், மக்களவைத் தோ்தலில் வலுவான கூட்டணி அமைக்காத காரணத்தால்தான் தோல்வியைச் சந்தித்தோம். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி கூறியது: அதிமுக வாக்குவங்கி எந்த வகையிலும் குறையவில்லை. வலுவாகவே உள்ளது. தோ்தல் தோல்விக்காக துவளாமல், கட்சிப் பணியில் அனைவரும் தீவிர கவனம் செலுத்துங்கள். வரும் சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு இப்போதே தயாராகுங்கள். திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. அதை, அதிமுகவுக்கு சாதகமாக்கிக் கொள்ள அனைவரும் பாடுபட வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்றாா் அவா்.

நாதகவுடன் கூட்டணி: சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் சில நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கருத்து தெரிவித்துள்ளனா்.

சிதம்பரம், மதுரை, பெரம்பலூா் ஆகிய 3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை (ஜூலை 13) ஆலோசனை நடத்த உள்ளாா்.

ஜூலை 17-இல் நடைபெற இருந்த தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் அதிமுக சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.