
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 பேர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 55 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
கடந்த 19-ஆம் தேதி 21 பேரும், ஜூன் 20-ஆம் தேதி 20 பேரும், 21-ஆம் தேதி 9 பேரும் உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் கள்ளக்குறிச்சியிலும், ஒருவர் சேலத்திலும் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பரமசிவம் (38), மணி மகன் கல்யாணசுந்தரம் (43), மண்ணாங்கட்டி மகன் சுரேஷ் (42), மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து தப்பியோடிய சேஷசமுத்திரத்தைச் சேர்ந்த முருகன் மகன் சுப்பிரமணி (40) ஆகிய 4 பேரும் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் என 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று(ஜூன் 23) பலியாகியுள்ளார். இதனால், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் 106 பேரும், புதுச்சேரியில் 17 பேரும், சேலத்தில் 30 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும் என மொத்தம் 157 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.