முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர்
Published on
Updated on
1 min read

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காக பூலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் முதல்வர் மு.க. ஸ்டானுக்கு நன்றி தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலினை இன்று (2.3.2024) முகாம் அலுவலகத்தில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன், பிரபாகரன், வைத்திசெல்வன், ஜியோ டாமின், போராட்டக் குழுவைக் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாத்திமா பாபு, ஹரிராகவன், மகேஷ்குமார், மெரினா பிரபு, சுஜித், குணசீலன், ரீகன், ராஜா, கிதர் பிஸ்மி, அம்ஜித், வசந்தி, சிம்லா, கோபால், வாஞ்சிநாதன், மாரியம்மாள் ஆகியோர் சந்தித்து, தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதையொட்டியும், இந்த ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டதோடு, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தற்போது அளித்துள்ளது தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வளர்ச்சி ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com