திருச்சி: ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருவெறும்பூர் சார்பதிவாளர் சபரி ராஜன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (65). ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் உள்ள காலி மனையை கார்த்திகேயன் என்பவருக்கு விற்பதாகவும், அதற்காக 1.3.2024 ஆம் தேதி திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதாக முடிவு செய்துள்ளார்கள்.
இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் பிப்ரவரி 27 ஆம் தேதி திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று அங்கிருந்த சார்பதிவாளர் சபரிராஜன் என்பவரை அணுகி பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக விவரம் கேட்டுள்ளார்.
அதற்கு சார்பதிவாளர் சபரிராஜன் ஒரு பத்திரத்திற்கு ரூ.10 ஆயிரம் விகிதம் இரண்டு பத்திரத்திற்கு ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து ரூ.20 ஆயிரம் தருவதாக கூறிய கோபாலகிருஷ்ணன், லஞ்சம் தர விருப்பம் இல்லாததால், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் செய்தாா்.
இதையடுத்து லஞ்சம் ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை(மார்ச்.1) மாலை 5 மணியளவில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் கோபால கிருஷ்ணன் வசம் இருந்து தனிநபர் சூர்யா (24) என்பவர் மூலம் சார்பதிவாளர் சபரிராஜன் (41) லஞ்ச பணத்தை பெற்ற போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோர் கையும் காலமாக பிடித்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர்.