சென்னை: விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்லும் தொலைவை குறைத்து வெறும் 5 கிலோ மீட்டர் ஆக்க வேண்டும் என்று மணலி புதுநகர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதன் மூலம், எண்ணூர் துறைமுகச் சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் என்றும், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கும் அந்த சாலைக்கு மாற்றாக இது அமையும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
அதாவது, மணலி புதுநகரிலிருந்து, சடையன்குப்பம் ஜோதி நகர் வழியாக, இணைப்புச் சாலையை மேம்படுத்தினாலே போதும்.. இப்பகுதி மக்களின் பெரிய பிரச்னை முடிவுக்கும் வரும் என்றும் கூறப்படுகிறது.
அதுபோல, மெட்ரோ ரயில் நிலையமும் தங்கள் பகுதிக்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
மணலி புதுநகரில் 30 ஆயிரம் குடியிருப்புகள் இருந்தாலும், அருகில் உள்ள கிராமங்களையும் சேர்த்தால், மொத்த குடியிருப்பு மக்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது.
அங்கு விச்சூர், சடையான்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. காலை மற்றும் மாலையில் கடுமையான போக்குவரத்து இப்பகுதியில் காணப்படுகிறது.
மணலி புதுநகர் என்பது செயற்கைக்கோள் நகரம் என அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த பெயருக்கேற்ப அடிப்படை வசதிகள் மட்டும் மேம்படுத்தப்படவில்லை. இங்கு அருகாமையில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கக் கூட இதுவரை எந்த திட்டமும் உருவாக்கப்படவில்லை. இணைப்புச் சாலைகளும் இல்லாததால், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் செல்ல வெகுதொலைவு பயணிக்கும் அவல நிலை உள்ளது. எனவேஇணைப்புச் சாலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.
சென்னை உரத் தொழிற்சாலைப் பகுதியில் கிட்டத்தட்ட 8 கிலோ மீட்டருக்கு ஏராளமான சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், சாலையில் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கனரக வாகனங்களின் அதிகரிப்பால், அவ்வப்போது விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இணைப்புச் சாலையை ஜோதிநகர் வழியாக ஏற்படுத்தலாம் என்கிறார்கள். ஏற்கனவே வெறும் மணல் நிறைந்ததாக இருக்கும் இந்த இணைப்புச் சாலையை பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பயன்படுத்துகிறார்கள்.