பிரதமரின் பிரசாரத்தால் தமிழகத்தில் மாற்றம் நிகழாது: செல்வப் பெருந்தகை

பிரதமரின் பிரசாரத்தால் தமிழகத்தில் மாற்றம் நிகழாது: செல்வப் பெருந்தகை
Published on
Updated on
1 min read

பிரதமரின் பிரசாரத்தால் தமிழகத்தில் மாற்றம் நிகழாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமானநிலையம் திங்கள்கிழமை வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். வடமாநில மக்களைப் போன்று தமிழர்களை ஏமாற்ற முடியாது. வரும் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு நல்ல தீர்ப்பை வழங்குவர்.

பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவித்ததில் இருந்து, அவர்களின் தோல்வி பயம் தெரிகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. ரா பிரிவு, உளவுத்துறை, அனைத்து போக்குவரத்துகள், துறைமுகங்கள் உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இவ்வாறு இருக்கும்போது, தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இதன் வழியாகத்தான் செல்கிறது. இதை பாஜக கட்டுப்படுத்த தவறிவிட்டது.

2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, பெட்ரோல் விலையை பாதியாக குறைப்பேன், இந்தியாவின் பண மதிப்பை அமெரிக்காவின் பணமதிப்பிற்கு நிகராக்குவேன் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. மேலும், ஊழலைப் பற்றி பேச பாஜகவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com