இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 21 பேருக்கு மார்ச் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 விசைப்படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (மார்ச் 17) காலை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு 21 மீனவர்களுக்கும் மார்ச் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 15 மீனவர்களும் அதற்கு முன்பு 20 மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எல்லைத் தாண்டியதாகக் கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகிவரும் நிலையில், இதில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.