மதுரை: 2024 மக்களவைத் தேர்தல் வெற்றி இந்தியா கூட்டணிக்கே என்று ஞாயிற்றுக்கிழமை மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு சனிக்கிழமை வெளியான நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கி உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சு.வெங்கடேசன் வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்து வருகிறார்.
இந்தநிலையில், இந்தியா கூட்டணி சார்பில் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சு.வெங்கடேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
18 ஆவது மக்களவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு சனிக்கிழமை வெளியான நிலையில்,ஞாயிற்றுக்கிழமை தேர்தலுக்கான பணியை துவங்கினார் சு.வெங்கடேசன்.
மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் உள்ள தியாகி பாலு சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பணியை தொடங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் அரசியலே எங்கள் அடையாளம். கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறோம். மதுரையில் குறைந்தபட்சம் 60 சதவிகித வாக்குகள் தங்களுக்குதான். மதுரையில் தாங்கள் வெற்றி பெறுவது உறுதி. மாமதுரை வெல்லும். இந்தியா வெல்லும் என அவர் கூறினார்.