பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதிமுக மற்றும் பாஜக தரப்புடன் ஒரு மாதமாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பாமக, திங்கள்கிழமை இரவு பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தது.
இந்த நிலையில், பாமக நிறுவனம் ராமதாஸ் இல்லத்துக்கு இன்று காலை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோனைக்கு பிறகு தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தத்தில் ராமதாஸும், அண்ணாமலையும் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து, அன்புமணி ராமதாஸும், அண்ணாமலையும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும் அண்ணாமலை பேசியதாவது:
“தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவராக ராமதாஸ் இருப்பார். தமிழகத்தில் 60 ஆண்டுகள் ஆட்சிக்கு மாற்றாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் கண்டிப்பாக மாற்றம் வரும். பாமகவின் முடிவால் நேற்றிரவில் இருந்து தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.” என்றார்.