கிருஷ்ணகிரி: பர்கூர் நெகிழி பொருள்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் கப்பல்வாடி கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமனின் மகன் கதிரேசன் என்பவர், நெகிழி, மரத்திலான கைவினைப் பொருள்களை விற்பனை செய்து வருகிறார். விற்பனை செய்யும் கடையின் அருகே, கிடங்கை அமைத்து பொருள்களை வைத்திருந்தார்.
தனது கிராமத்தில், திருவிழா நடைபெறுவதால், கடந்த மூன்று நாள்களாக கடையை அவர் திறக்கவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை இரவு, இவரது கிடங்கில் இருந்து கரும் புகை வருவதை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும், காற்று வீசியதால் தீ பற்றி எரிய தொடங்கியது.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி, பர்கூர் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மூன்று வாகனங்களில் வந்து, தீயை முற்றிலும் கட்டுப்படுத்தி, மேலும் தீ பரவாமல் தடுத்தனர். சுமார் நான்கு மணிநேர போராட்டத்திற்கு பிறகு, தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தன. இந்த தீ விபத்து காரணமாக, பர்கூரில், மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால், நகர் இருளில் மூழ்கியது.
இந்த விபத்து குறித்து, தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.