கடலூரில் பாமக சார்பில் போட்டியிட தான் மறுப்பு தெரிவித்தாக என வெளியான செய்திக்கு இயக்குநர் தங்கர் பச்சான் விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது.
அதில் கடலூர் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடலூரில் பாமக சார்பில் போட்டியிட தங்கர் பச்சான் மறுப்பு தெரிவித்தாக இணையதளங்களில் செய்திகள் வேகமாக பரவின. இதனால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.
ஆனால், இதற்கு தங்கர் பச்சான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், கடலூர் மக்களவத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.