அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டிவனத்தில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சி.வி.சண்முகம் பேசுகையில்,
“நாட்டில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் மோடி மூன்று வேளைக்கு ஆறு முறை ஆடை மாற்றி மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரின் இரண்டு நண்பர்கள் அதானியும், அம்பானியும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
ரூ. 400-க்கு இருந்த சிலிண்டர் ரூ.1,200-க்கு உயர்ந்ததற்கும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமும் மோடிதான். காலியாகவுள்ள 13 லட்சம் மத்திய அரசு பணியை இன்னும் நிரப்பவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் 1,000 தமிழர்களுக்குகூட மத்திய அரசுப் பணி வழங்கவில்லை. நெய்வேலியில் கடந்தாண்டு சேர்க்கப்பட்ட 1,000 பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை. கடலூர் மாவட்டம் என்.எல்.சி.யால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அதிமுக அறிவித்தது.
தமிழகம் வரும் போதெல்லாம் தமிழைப் போன்ற தொன்மை மொழி என்று பேசுவார். திருக்குறளை பேசும் மோடி, ஏன் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவில்லை. எல்லாம் வாக்குக்கான நடிப்பு மற்றும் நாடகம்.” என்று தெரிவித்தார்.