தமிழக மீனவர்களை காக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடி எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வாக்கு கேட்டு வருகிறார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தூத்துகுடி வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசார பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், ''ராமேஸ்வரத்தை உலக சுற்றுலா தளமாக மாற்றிக்காட்டினாரா? வாயால் வடை சுடுபவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியின் கரும்புள்ளி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம். தூத்துக்குடியில் மனிதநேயமற்ற துப்பாக்கிச்சூட்டை எடப்பாடி அரசு நடத்தியது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டதாக எடப்பாடி பழனிசாமி பெரிய பொய்யைக் கூறினார். ஆனால், உண்மையை அருணா ஜெகதீசன் அறிக்கை வெளிப்படுத்திவிட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பதியப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இரக்கமின்றி ஒரு ஆட்சி நடக்க கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சி ஒரு உதாரணம். உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது திமுக.
தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் திமுவுக்கும்தான் போட்டி என இபிஎஸ் சொன்னது மகிழ்ச்சி. உதயநிதி பற்றி அவர் பேசுவதும் எனக்கு இரண்டாவது மகிழ்ச்சி. உதயநிதி பற்றி எடப்பாடி விமர்சித்தால் கவலையில்லை. அதனால், மக்களுக்கு நன்மை நடந்தால் சரி.
மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத பிரதமர் மோடி விஸ்வகுருவா? மெளனகுருவா?.
ராமேஸ்வரத்துக்கும் தனுஷ்கோடிக்கும் தூரமில்லை, தமிழகத்துக்கும் மோடிக்கும் தான் தூரம்.
கட்சத்தீவு மீட்கப்படும் என சுஷ்மா சுவராஜ் சொனனார். இதுவரை பாஜக அதை செய்யவில்லை.
மீனவர்கள் மீது அறிவிக்கப்படாத போரை இலங்கை மேற்கொண்டு வருகிறது. அது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
விவசாயிகளை எதிரிகள் போன்று நடத்துவதுதான் மோடி ஆட்சி மடலா? திமுகவின் காலை உணவுத் திட்டத்தை பாராட்டி பள்ளி மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்'' என மு.க. ஸ்டாலின் பேசினார்.