மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காத நிலையில், மாற்று சின்னத்தில் போட்டியிடுவோம் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் துரை வைகோ போட்டியிடுகிறார்.
இதற்கிடையே, மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இன்று காலை 9 மணிக்குள் தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், சட்டப்படி குறைந்தபட்சம் இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்து மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துரை வைகோ, “பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கேட்கும் சின்னத்தை ஒதுக்கும் தேர்தல் ஆணையம், நாம் தமிழர், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்கும் சின்னத்தை ஒதுக்காமல் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக தெரிவித்தார்.
மேலும், பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை என்றாலும், வேறு சில சின்னங்களை தேர்வு செய்து வைத்துள்ளோம், அதில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.